உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரி நீர் கணக்கீடும் கருவி பொருத்தும் பணிகள் விரிவாக்கம் பிற மாவட்ட ஏரிகளிலும் நவீன அறைகள் அமைப்பு 

ஏரி நீர் கணக்கீடும் கருவி பொருத்தும் பணிகள் விரிவாக்கம் பிற மாவட்ட ஏரிகளிலும் நவீன அறைகள் அமைப்பு 

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தை தொடர்ந்து, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், ஏரி நீர் கணக்கீடும் கருவி பொருத்துவதற்கு, நவீன அறைகள் கட்டும் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், நீர்வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டில், 2,500க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. தென் மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய இரு பருவ மழைகளுக்கு, நீர் வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகள் நிரம்பினால், 1.75 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், பிரதான ஏரிகளில் மட்டுமே, ஏரி நீரின் இருப்பு விபரங்களை அளவீடு செய்ய முடிகிறது. பிற ஏரிகளில், நீர் மட்டத்தின் அளவு தெரிந்துக் கொள்ள முடியவில்லை. இந்த சிரமத்தை தவிர்க்கும் விதமாக, அனைத்து விதமான ஏரிகளில் நீரின் இருப்பு விபரத்தை தெரிந்துக் கொள்ளும் விதமாக, டிஜிட்டல் அளவீடு செய்யும் நவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இந்த கருவி, ஏரி நீரின் அளவினை பதிவு செய்து, சென்னை பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும். அங்கிருந்து எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் சம்பந்தப்பட்ட நீர் வளத்துறை அதிகாரிகளுக்கு பகிரப்படும். இந்த செயல்பாடு கருவிகளை அமைக்க, அந்தந்த ஏரி மதகுகளின் மீது, அதிநவீன கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கு ஏற்ப, புதிய அறைகள் கட்டுவதற்கு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறை கட்டுமான பணிக்கும், தலா, 2 லட்சம் ரூபாய் வீதம், நான்கு மாவட்டங்களில், 80 ஏரிகளுக்கு 1.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது, நவீன அறைகள் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களிலும், நவீன அறைகள் கட்டும் பணிகள் இறுதி கட்டம் எட்டும் நிலையில் உள்ளது. இருப்பினும், ஏரி நீர் மட்டம் பதிவு செய்யும் கருவி மற்றும் செயற்கைகோலுக்கு அனுப்பும் வசதியுள்ள கருவிகள் பொருத்தவில்லை. நவீன அறைகளில், பதிவுகள் பரிமாறும் கருவிகளை பொருத்திய பின், நீர் அளவு, மழை அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல் கிடைக்கும் என, நீர் வள ஆதாரத் துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து, நீர் வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏரி நீரின் இருப்பு விபரம், மழை பெய்தால் பதிவாகும் நீரின் விபரம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏற்ப, நவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இருப்பினும், பேரிடர் காலங்களில் தகவல்களை முழுமையாக தெரிந்துக் கொள்ள கூடுதல் தரவுகள் பதிவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி