சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு உத்திரமேரூரில் விவசாயிகள் ஆர்வம்
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு பணியில், விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். உத்திரமேரூர் தாலுகாவில் 73 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இரண்டு மாதத்திற்கு முன் அப்பகுதி விவசாயிகள், சொர்ணவாரி பருவ நெல் அறுவடை பணிகளை முடித்தனர். ஒராண்டாக மழைப்பொழிவும் போதுமான அளவு இருந்ததால், பாசன கிணறுகளில் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. மேலும், உத்திரமேரூர் தாலுகாவை ஒட்டி செல்லும் செய்யாற்றிலும் இரண்டு மாதங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் சம்பா பருவ நெல் நடவு பணியை துவக்க முடிவு செய்தனர். அதன்படி, உத்திரமேரூர், காக்கநல்லுார், மருத்துவன்பாடி, கரும்பாக்கம், நெய்யாடுபாக்கம், ஆதவப்பாக்கம் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் நிலங்களை உழவு செய்து, நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மருத்துவன்பாடி விவசாயிகள் கூறியதாவது:உத்திரமேரூர் தாலுகாவில் ஏரி, ஆறு, பாசன கிணறு ஆகியவற்றின் மூலமாக, விளை நிலங்களுக்கு தண்ணீர் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்வரத்து கால்வாய்கள் மூலமாக ஏரிகளில் போதி ய தண்ணீர் இருப்பு உள்ளது. அதேபோல, திறந்த நிலை பாசன கிணறுகளிலும் தண்ணீர் மட்டம் உயர்ந்து உள்ளது. எனவே, இந்தாண்டிற்கான சம்பா பருவ நேரடி நெல் விதை ப்பு பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.