கிராம சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு...ரூ.36.17 கோடி:காஞ்சியில் பளபளக்க போகிறது 62 கி.மீ., சாலை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 62 கி.மீ.,சாலை அமைக்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு, 36.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில் பணி முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய உதவிக்கோட்டங்கள் உள்ளடக்கிய காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை கோட்டங்கள் இயங்கி வருகின்றன.இவை அனைத்தும், நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதில், 1,122 கி.மீ., துார சாலைகள் உள்ளன. கிராமப்புறங்களில் இருக்கும் சாலைகளில், வாகன பயன்பாடு அதிகரிப்பு மற்றும் நெரிசலை குறைக்கும் பொருட்டு, சாலை விரிவாக்கம் மற்றும் புதிய பாலம் கட்டும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர். இதுதவிர, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 596 கி.மீ., துாரம் கிராமப்புற சாலைகள் மற்றும், 400 கி.மீ., துாரம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றிய சாலைகள் என, மொத்தம் 996 கி.மீ., துாரம் சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இதில், ஒரு சில சாலைகளை முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.