தார்ப்பாய் மூடாமல் செல்லும் ஜல்லி லாரிகளால் ஆபத்து
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, அருங்குன்றம், பழவேரி, திருமுக்கூடல், எடமச்சி ஆகிய பகுதிகளில், குவாரிகள் இயங்கி வருகின்றன.இங்கு, வெடி வைத்து தகர்க்கப்படும் பாறைகளை, அருகிலுள்ள கிரஷர்கள் வாயிலாக, ஜல்லிகளாகவும், எம்.சான்ட் மணலாகவும் உடைக்கப்பட்டு வருகின்றன.இவை, லாரி மற்றும் டிராக்டர் வாயிலாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், உத்திரமேரூர், சாலவாக்கம் பகுதிகளில், தொடர்ந்து, லாரி மற்றும் டிராக்டர்களில் தார்ப்பாய் மூடாமல் ஜல்லிக்கற்கள் ஏற்றிச்செல்லப்படுகின்றன.அவ்வாறு செல்லும்போது, வேகத்தடை உள்ள இடங்களில் ஜல்லிக்கற்கள் கிழே சிதறி, வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள், துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.எனவே, தார்ப்பாய் மூடாமல் கட்டுமான பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.