உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வலியுறுத்தல்

நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வலியுறுத்தல்

திருமுக்கூடல், திருமுக்கூடலில் நிரந்தரமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. இப் பகுதி விவசாயிகள், பாலாறு மற்றும் செய்யாற்று பாசனத்தை கொண்டும், ஏரி, கிணற்று பாசனங்கள் மூலமாகவும் 400 ஏக்கர் நிலப் பரப்பில் இரண்டு போகத்திற்கு நெல் சாகுபடி செய்கின்றனர். இப்பகுதியில், நவரை பருவத்திற்கான நெல் மட்டும் கொள்முதல் செய்திடும் வகையில், அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்படுகிறது. திருமுக்கூடல் மட்டு மின்றி சுற்றுவட்டார பகுதி விவசாயிகளும் இங்கு நெல் கொள்முதல் செய்கின்றனர். நவரை பருவம் தவிர்த்து, மற்ற நேரங்களில் வெளி சந்தைகளிலும், தனியார் நெல் வியாபாரிகளிடமும் குறைந்த விலைக்கு விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதுகுறித்து, திருமுக் கூடல் ஏரி நீர் பாசன பிரிவு தலைவர் லட்சுமணன் கூறியதாவது: திருமுக்கூடலில் நிரந்தரமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, 2023ல், திருமுக்கூடல், சிறுதாமூர், மதுார், புல்லம்பாக்கம், பழவேரி ஆகிய ஐந்து ஊராட்சிகள் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எப்போதும் இயங்கும் வகையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தி உள்ளார். எனவே, திருமுக் கூடலில் ஆண்டு முழுக்க செயல்படும் வகையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயக்க, நுகர்பொருள் வாணிப கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை