ரேஷன் கடை ஊழியர்களுக்கு டிச.6ல் நேர்காணல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், சில கூட்டுறவு சங்கங்களில், 35 ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் 16 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த காலி பணியிடங்களுக்கு, கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்ட இருந்தது. இதில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் பதவிக்கு 3,797 பேர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு, 995 பேர் என, மொத்தம், 4,792 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இதில், 112 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 4,680 பேர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க, 'ஆன்லைன்' வாயிலாக அனுமதி அளிக்கப்பட்டு இருந்தன.காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில், நவ.,25ம் தேதி துவங்கியது. முதல் நாளில், படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.தமிழகம் முழுதும், வட கிழக்கு பருவ மழை முன்னிட்டு நேற்று கன மழை பெய்யக்கூடும் என்பதால், நேற்று நடக்கவிருந்த நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.இதற்கு பதிலாக, டிச.,6ல் நேர்காணல் நடத்தப்படும் என, கூட்டுறவு துறை தெரிவித்து உள்ளது.