படப்பை மேம்பால பணி நிறைவு வரும் ஜூன் 3ல் திறக்க திட்டம்?
படப்பை:வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலை, படப்பை பஜார் பகுதியில் நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த 2022, ஜனவரியில் துவங்கி நடந்து வந்தது.பாலம் கட்டுமான பணிக்கு வைக்கப்பட்ட தடுப்புகளால் சாலை குறுகி, வழக்கத்தை விட இரு மடங்கு நெரிசல் அதிகரித்தது. இதனால், படப்பையில் மக்கள் வேதனைக்குள்ளாகினர்.இந்நிலையில், மேம்பால கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மேம்பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், படப்பை போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.இதுகுறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:படப்பை மேம்பாலம் கட்டுமான பணி, 95 சதவீதம் முடிந்து விட்டது. மேம்பாலத்தின் மீது தார்ச் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.எஞ்சியுள்ள பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும். மேம்பாலம் திறப்பு விழா குறித்து, உயர் அதிகாரிகள் முடிவு செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.