உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேக பந்தகால் நடும் விழா

வல்லக்கோட்டை முருகன் கோவில் கும்பாபிஷேக பந்தகால் நடும் விழா

ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் அருள்பாலிக்கிறார்.இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய, ஹிந்து சமய அறநிலைத் துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, கோவில் நிதி, உபயதாரர்கள் நிதி, 1.25 கோடி ரூபாய் மதிப்பில், 2023ம் ஆண்டு, மார்ச் மாதம் புனரமைப்பு பணிகள் துவங்கின.மூலவர், உற்சவர், விநாயகர், சண்முகர், திரிபுரசுந்தரி அம்மன், பைரவர், இடும்பன், கடம்பன் சன்னிதிகள் புனரமைத்தல்., பிரகாரத்தில் கருங்கல் தரைதளம் அமைத்தல், விமானங்கள், கோபுரங்களில் வண்ணம் தீட்டுதல், தளவரிசை பழுதுபார்த்தல், வடக்கு ராஜகோபுரம் கட்டுதல், மடப்பள்ளி கட்டுதல், தேர் கொட்டகை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது.இதையடுத்து, ஜூன் மாதம், 7ம் தேதி, கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை, கோவில் முன், பந்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ், உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி