பெண் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, திம்மசமுத்திரத்தில் வீட்டை கொள்ளையடிக்கும்போது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒருவரை கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஜெயசுரேஷ். 39; இவரது மனைவி அஸ்வினி, 30. ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் அஸ்வினிக்காக, காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் உ.ள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஜெயசுரேஷூம், அஸ்வினியும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 23ம் தேதி, மதியம் பணிக்கு சென்ற அஸ்வினி, இரவு 11:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் காலை அஸ்வினி, மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது. அஸ்வினியின் சகோதரன் அறிவரசன், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, ஆடைகள் கலைந்த நிலையில், உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன் அஸ்வினி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த நகைகள், வீட்டிலிருந்த பொருட்கள் மாயமாகி இருந்தன. சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அஸ்வினி இறந்தார். பொன்னேரிக்கரை போலீசார், இவ்வழக்கில் முதற்கட்டமாக, பாலுச்செட்டிச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த, தமிழ்வாணன், 28, என்பவரை, ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில், பள்ளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர், 24. என்பவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அஸ்வினியின் வீட்டை கொள்ளை அடிக்க ராஜசேகர் தான் திட்டமிட்டதாகவும், அதற்கு தமிழ்வாணன் என்பவரை கூட்டு சேர்த்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.