வீணாகி வரும் குடிநீர் தொட்டி மேட்டு நகர்வாசிகள் அவதி
புத்தேரி : காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சியில் மேட்டு நகர் உள்ளது. இப்பகுதி வாசிகளின் கூடுதல் குடிநீர் தேவைக்காக, 10 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில், சிறுமின்விசை ஆழ்துளை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.வீட்டு உபயோக கூடுதல் தண்ணீர் தேவைக்கு, இப்பகுதியினர் குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், ஓராண்டிற்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக, ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டு இருந்த நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது.பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வராத நாட்களில், இப்பகுதிவாசிகள் அருகே உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால், குடிநீர் தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது.எனவே, பழுதடைந்த நீர்மூழ்கி மின்மோட்டாரை சீரமைத்து, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேட்டு நகர்வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.