தடுப்பு இல்லாத தரைப்பாலம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார்:வட்டம்பாக்கம் செல்லும் சாலையில், பனப்பாக்கத்தில் உள்ள தரைப்பாலத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அருகே பனப்பாக்கத்தில் இருந்து பிரிந்து செல்லும் வட்டம்பாக்கம் சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டார கிராம மக்கள், இந்த சாலை வழியாக ஒரகடம், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில், பனப்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் குறுக்கே தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த நிலையில், தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால், தரைப்பாலத்தின் மீது செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, நிலைத்தடுமாறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல, அவ்வழியாக செல்லும் தனியார் பள்ளி பேருந்துகள், தடுப்பு இல்லாத தரைப்பாலத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பனப்பாக்கம் தரைப்பாலத்திற்கு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.