திறந்தநிலை கிணற்றால் மலையாங்குளத்தில் விபத்து அபாயம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின் விசைக்குழாய்கள் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.மேலும், குடிநீர் தேவைக்காக, 2020 --- 21ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 12 லட்சம் ரூபாய் செலவில், மலையாங்குளம் ஏரியில் பொதுக்கிணறு அமைக்கப்பட்டது.இந்த கிணற்று நீரை அப்பகுதியினர் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். தற்போது, கிணறு முறையான பராமரிப்பு இல்லாமலும், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. திறந்த நிலையில் உள்ள இந்த கிணற்றின் அருகே, அப்பகுதி சிறுவர்கள் அடிக்கடி விளையாடி வருகின்றனர். சிறுவர்கள் விளையாடும்போது எதிர்பாராதவிதமாக, கிணற்றில் விழுந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, திறந்தநிலை கிணற்றின் மீது இரும்பு கம்பிவலை அமைக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.