உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்நடைகளை கட்டுப்படுத்துவதில் உரிமையாளர்கள் அலட்சியம்

கால்நடைகளை கட்டுப்படுத்துவதில் உரிமையாளர்கள் அலட்சியம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் கால்நடை பராமரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இப்பகுதி கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும்போதும், வீடு திரும்பும் போதும் வாலாஜாபாத் நெடுஞ்சாலையை கடந்துதான் செல்லும் நிலை உள்ளது.அச்சமயங்களில் சிறிது நேரம் போக்குவரத்து இயல்பாக பாதிக்கிறது. எனினும், கால்நடை பராமரிப்போரில் பலர், கால்நடைகளை எந்த நேரமும் இரவு பகல் பாராது சாலையில் விட்டு விடுகின்றனர்.இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்வோர் தினசரி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வாலாஜாபாத்தில் இருந்து, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் சாலை, பஜார் வீதி, ஒரகடம் சாலை போன்ற பகுதிகளில், நாள் முழுக்க கால்நடைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை இருந்து வருகிறது. எனவே, வாலாஜாபாத் சாலையில் திரயும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அவ்வப்போது கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.எனினும், கால்நடைகளை முறையாக பராமரிப்பதில் அதன் உரிமையாளர்கள் அலட்சியம் காட்டுவது கவலை அளிக்கிறது. வாலாஜாபாத் சாலையில் கால்நடைகள் திரிவதை கட்டுப்படுத்த இனிவரும் காலங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை