வடிகால்வாய் வசதி இல்லாததால் தெருவிலே தேங்கும் மழைநீர்
உத்திரமேரூர், உத்திரமேரூர் அடுத்த, பொன்னாங்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள தெருக்களில் வடிகால்வாய் வசதி இல்லாமல் உள்ளது.இதனால், மழை நேரங்களில் தண்ணீரானது அங்குள்ள தெருக்களிலே தேங்கி வருகிறது. மேலும், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் தெருக்களிலே தேங்குகிறது.இதிலிருந்து தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக வடிகால்வாய் அமைக்கப்படாமல் இருப்பதால், மழை நேரங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்குவது தொடர் கதையாக உள்ளது.எனவே, தெருக்களில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க, வடிகால்வாய் அமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.