ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையசீவரம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், இப்பகுதியைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.பழையசீவரம் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்தோர், மருத்துவ சிகிச்சைக்கு 20 கி.மீ., துரரத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை அல்லது வாலாஜாபாத் வட்டார அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது.இதனால், இடைவெளி தூரம் காரணமாக கர்ப்பிணியர் மற்றும் முதியோர் அவதிப்படுகின்றனர்.மேலும், பழையசீவரம் எதிர்ப்புற கரையில், பாலாற்றங்கரையொட்டி, பல கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களைச் சேர்ந்தோரும் அவசர ஆபத்து நேரங்களில் பழையசீவரம் வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனைக்கு செல்கின்றனர்.இதனால், பழையசீவரத்தை சுற்றி உள்ள பல கிராம மக்களும் உரிய நேரத்தில் தேவையான சிகிச்சை கிடைக்காமல் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.எனவே, பழையசீவரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தி சுற்றிலும் உள்ள மக்களுக்கு சுகாதார வசதி காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.