ரவுண்டனா பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை ஏற்படுத்த கோரிக்கை
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் ரவுண்டனா பகுதி உள்ளது. இந்த ரவுண்டனா சாலையின் ஒரு புறத்தில், காஞ்சிபுரம் செல்வதற்கான பேருந்து நிறுத்தமும், மற்றொரு புறசாலை ஓரத்தில் செங்கல்பட்டு செல்வதற்கான பேருந்து நிறுத்தமும் உள்ளது.இதில், காஞ்சிபுரம் செல்வதற்கான நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை ஏற்படுத்தப்ப்பட்டுள்ளது. எனினும், செங்கல்பட்டு செல்வதற்கான ரவுண்டனா பேருந்து நிறுத்தத்தில் இதுவரை நிழற்குடை வசதி ஏற்படுத்தப்படவில்லை.இதனால், வாலாஜாபாத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்வோர் மற்றும் திருமுக்கூடல், உள்ளாவூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பயணியர், காற்று மழை மற்றும் வெயில் நேரங்களில் அவதிபடுகின்றனர்.எனவே, செங்கல்பட்டு செல்வதற்கான பேருந்து நிறுத்த சாலை ஓரத்தில் பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.