சாலையில் சிதறியுள்ள ஏரி மண் விபத்துக்கு முன் அகற்ற கோரிக்கை
காஞ்சிபுரம், விபத்துகள் ஏற்படுவதற்கு முன், சாலையில் சிதறி கிடக்கும் ஏரி மண்ணை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் - வண்டலுார் இடையே, நான்கு வழி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, ஒரகடம், படப்பை, தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. சமீபத்தில், நத்தாநல்லுார் ஏரியில் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதால், வாலாஜாபாத் - வண்டலுார் சாலை முழுதும், லாரிகளில் இருந்து மண் சிதறுகிறது. இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையில் சிதறி கிடக்கும் மண்ணால் நிலை தடுமாறி விழுகின்றனர். மேலும், அந்த மண் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் புழுதியுடன் பறக்கின்றன. எனவே, வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில் சிதறி கிடக்கும் மண்ணை, பெரியளவிலா விபத்துகள் ஏற்படுமுன், சம்பந்தப்பட்ட துறையினர் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.