வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் தடத்தில் கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டுகோள்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் தடத்தில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.வாலாஜாபாதில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையில், ஊத்துக்காடு, நாய்க்கன்குப்பம், கட்டவாக்கம், தென்னேரி, மஞ்சமேடு, அய்மிச்சேரி, குண்ணம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இக்கிராமங்களைச் சேர்ந்தோர், தினமும், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் மற்றும் இடையிலான கிராம பகுதிகளுக்கு பல காரணங்களாக பயணிக்கின்றனர்.மேலும், இச்சாலையையொட்டி உள்ள பல்வேறு கிராமங்களில் தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலையில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக சிப்ட் முறையில் பணியாற்றுகின்றனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தோர், வாலாஜாபாத் வழியாக, சுங்குவார்சத்திரம் சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து, ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு பணி நிமித்தமாக சென்று வருகின்றனர்.இந்நிலையில், வாலாஜாபாதில் இருந்து, சுங்குவார்சத்திரம் செல்ல போதுமான பேருந்து வசதி இல்லை.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரத்தில் போதுமான அரசு பேருந்துகள் இயக்காததால், ஆட்டோ அல்லது தனியார் பேருந்துகள் மூலம் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது.இதனால், பள்ளி மாணவ - மாணவியர் இலவச பேருந்து பாஸ் இருந்தும் கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை உள்ளது.போக்குவரத்து பிரச்னையால் பல தரப்பினரும் குறித்த நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.எனவே, வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் இடையே, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.