சாலையோரம் எம்.சாண்ட் குவியல் உத்திரமேரூரில் விபத்து அபாயம்
ஆற்பாக்கம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை வழியாக குருவிமலை, களக்காட்டூர், வேடல், ஆற்பாக்கம், மாகரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.இச்சாலையில், கட்டுமானப் பணிக்காக லாரிகளில் எடுத்துச் சென்ற எம்.சாண்ட் மணல், மேல்பெரமநல்லுாரில் இருந்து, ஆற்பாக்கம் ஏரிக்கரை வரை சாலையோரம் ஆங்காங்கே குவியலாக உள்ளது.இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்களுக்கு வழிவிட, சாலையோரம் ஒதுங்கும் மணல் குவியலில் சிக்குகின்றனர்.எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், மேல்பெரமநல்லுாரில் இருந்து, ஆற்பாக்கம் ஏரிக்கரை வரை சாலையோரம், போக்குவரத்திற்கு இடையூறாக குவிந்துள்ள எம்.சாண்ட் மணல் குவியலை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.