புயலால் சேதமடைந்த 96 சாலைகளை சீரமைக்க... ரூ.64 கோடி!
'காஞ்சிபுரம் - பெஞ்சல்' புயலால், 96 சாலைகள் சேதமடைந்துள்ளன. இச்சாலைகளை இரு விதமாக சீரமைக்க, 64 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசிற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, இதர சாலை என, மொத்தம் 2,253 கி.மீ., துார சாலைகள் உள்ளன.இதுதவிர, 1,292 கி.மீ., ஒன்றிய சாலைகள், 1,694 கி.மீ., துாரம் ஊராட்சி சாலைகள் என, மொத்தம் 5,239 கி.மீ., துார சாலை வகைப்பாடுகள் உள்ளன.கடந்த 2021ம் ஆண்டு காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய உதவிக்கோட்டங்களை உள்ளடக்கிய நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புற பகுதியில் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 1,122 கி.மீ., சாலைகள் உள்ளன. 'பெஞ்சல்' புயல் மழையால், 100க்கும் மேற்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. இதில், 69 சாலைகள் தற்காலிக சீரமைப்பு மற்றும் 27 சாலைகளை நிரந்தரமாக சீரமைக்கப்பட உள்ளன. குறிப்பாக, 69 தற்காலிக சாலைகள் சீரமைப்பு பணிகளுக்கு, 4 கோடி ரூபாய் மற்றும் 27 நிரந்தர சாலை சீரமைப்புக்கு, 60 கோடி ரூபாய் என, மொத்தம் 64 கோடி ரூபாய் செலவில், 96 சாலைகள் சீரமைக்க வேண்டும் என, அரசிற்கு நெடுஞ்சாலை துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது: பெஞ்சல் புயல் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, 64 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசிற்கு பரிந்துரை செய்துள்ளோம். அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியில் இருந்து, தற்காலிக மற்றும் நிரந்தரமாக சாலை அமைக்கும் பணிகள் என, இரு விதமான பணிகளை பிரித்து, பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.அவசர தேவை கருதி, ஒதுக்கீடு நிதிக்கு ஏற்ப, 'டெண்டர்' விட்டு பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மத்திய - மாநில அரசு நிதியை பயன்படுத்த முடிவு
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 130.64 கி.மீ., துார சாலைகள் உள்ளன. இதில், 27.45 கி.மீ., துார சாலைகள் 'பெஞ்சல்' புயலால் சேதமடைந்துள்ளன. மேலும், 159 தெருக்களில் உள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகள் மற்றும் தெரு சாலைகளை சீரமைக்க அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளோம். நிதி கிடைக்காத பட்சத்தில், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஏதேனும் ஒரு நிதிகளை பயன்படுத்தி, சேத பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.