அரசு கட்டடங்கள் கட்டுமான பணி ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஆய்வு
காஞ்சிபுரம்:'அரசு திட்டங்களின் கீழ் கட்டடங்கள் கட்டும் போது, போதிய அளவுக்கு தண்ணீர் ஊற்றி, அவற்றின் உறுதித்தன்மையை மேம்படுத்த வேண்டும்' என, பொறியாளர்களுக்கு அறி வுரை வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் திட்டங்களின் கீழ், பல கட்டடங்கள் கட்டப்படுவதுடன், சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் குறித்து, ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியங்களில், மாநில ஊரக வளர்ச்சி துறை தரக்கட்டுப்பாடு கண்காணிப்பு அலுவலர் ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினர். அத்துடன், வாலாஜாபாத் ஒன்றியம் ஆரியம்பாக்கம், களியனுார் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். கட்டடங்கள் கட்டும் போது, போதிய அளவுக்கு தண்ணீர் ஊற்றி, அவற்றின் உறுதிதன்மையை மேம்படுத்த வேண்டும் என, பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.