ஸ்ரீபெரும்புதுாரில் பொய் வழக்கு பதிவு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., சஸ்பெண்ட்
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுாரில் பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர் ஆகிய இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் ராஜலட்சுமி டிராவல்ஸ் நிறுவனத்தில், சிவானந்தம் என்பவர் பணியாற்றி வந்தார். இந் நிறுவனத்தின் பேருந்துகளை சிவானந்தம் அடித்து நொறுக்கியதாக, 2023ம் ஆண்டு, நவம்பர் மாதம், டிராவல்ஸ் நிறுவனம் சார்பில், ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிவானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அப்போது, ஸ்ரீபெரும்பதுார் காவல் ஆய்வாளராக பரந்தாமன் என்பவரும், உதவி ஆய்வாளராக துளசி என்பவரும் பணியாற்றி வந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த சிவானந்தம், தன் மீது பொய் வழக்கு பதிவு செய்து, கைது செய்ததாக, காவல் துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்தார்.மேலும், 2023ம் ஆண்டு, நவம்பர் மாதம், தீபாவளி விடுமுறையில், சிவானந்தம், பரமக்குடி சென்றதாகவும், அன்றைக்கு, ஸ்ரீபெரும்புதுாரில் தான் இல்லை என்பதற்கான ஆதாரங்களையும் புகாருடன் இணைத்தார்.இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசாரின் நடவடிக்கையில் உள்நோக்கம் இருப்பதாக கருதிய போலீஸ், உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.இதைத் தொடர்ந்து, உத்திரமேரூரில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் பரந்தாமனை, சஸ்பெண்ட் செய்து, காஞ்சிபுரம் டி.ஐ.ஜி., திஷாமிட்டல், உத்தரவிட்டார்.திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் துளசியை, அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.