உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பைக்கில் சென்ற மாணவி லாரி மோதி உயிரிழப்பு

பைக்கில் சென்ற மாணவி லாரி மோதி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்:சென்னையில் இருந்து பெங்களூருக்கு நண்பருடன் ' பைக் ட்ரிப்' சென்ற கல்லுாரி மாணவி, லாரி மோதி உயிரிழந்தார். சென்னை தரமணியைச் சேர்ந்த சந்திரலேகா மகள் சிபிதா, 22; தரமணி ஆசான் மெமோரியல் கல்லுாரியில் எம்.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, கல்லுாரி நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் இருந்து, பெங்களூருக்கு ' பைக் ட்ரிப்' சென்றார். சக நண்பரான அரிஷ், 24, என்பவரின் ' ஆர்௧௫ யமஹா' பைக்கில் சிபிதா சென்றார். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருங்காட்டுக்கோட்டை அருகே வந்த போது, அதே திசையில் பின்னால் வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சிபிதா உயிரிழந்தார். அரிஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அங்கு வந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், அரிஷை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிபிதாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி