திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம்:திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க, பள்ளி மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருக்குறளில் உள்ள கருத்துகளை, பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கல்வியறிவோடு விளங்க, தமிழக அரசால், 'திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு' திட்டம் அமலில் உள்ளது. மொத்தமுள்ள 1,330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ- - மாணவியருக்கு தலா, 15,000 ரொக்கப் பரிசாக தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் வழங்குகிறது. நடப்பாண்டிற்கான இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ - மாணவியர், 1,330 திருக்குறளையும் ஒப்பிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண், போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். திருக்குறள் முற்றோதல் திறனாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர், தமிழ் வளர்ச்சித் துறை வலைதளமான https://tamilvalarchithurai.org/tkm/ வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.