சாலை வசதியில்லாத ரயில் நிலையம் மழைநீரில் செல்ல வேண்டிய அவலம்
காஞ்சிபுரம்: நத்தப்பேட்டை ரயில் நிலையத்திற்கு, சாலை வசதி இல்லாததால், மழைநீரில் சேறாகிப் போகும் சாலையில் பயணியர் நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தை அடுத்து நத்தப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் மார்கத்தில் செல்லும் ரயிலில், தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். ரயில் நிலைய வளாகத்தில் உள்ள சாலை, மண் சாலையாக உள்ளதால், பல இடங்களில் பள்ளமாக காட்சியளிக்கிறது. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி சகதியாகி விடுகிறது. இதனால், ரயில் நிலையத்திற்கு சென்று வரும் பயணியர், மழைநீரில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, நத்தப்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்லும் மண் சாலையை, சிமென்ட் சாலையாக மாற்ற, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.