உத்திரமேரூர் புறவழிச்சாலைக்கு இடம் அளவிடும் பணி மும்முரம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் நகரை சுற்றி, 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள், உத்திரமேரூர் வழியே செங்கல்பட்டு, சென்னை, வந்தவாசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.உத்திரமேரூரில் சாலைகள் குறுகளாக இருப்பதால், காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.கடந்த ஜூலை மாதம், புறவழிச் சாலை அமைக்க 37.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதற்கான பூமி பூஜை நடந்தது. தற்போது, சாலை அமைக்க இட அளவீடு செய்யும் பணி, வேடபாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.