தீபாவளிக்கும் ராஜாஜி மார்க்கெட்டில் வியாபாரம் இல்லை டெண்டர் பணிகளே முடியாததால் வியாபாரிகள் குமுறல்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் நகரில் செங்கழு நீரோடை வீதியில் நேரு மார்க்கெட்டும், ரயில்வே சாலையில் ராஜாஜி மார்க்கெட்டும் இயங்கி வருகிறது. இந்த இரு மார்க்கெட்டுகளும் நகரில் துவங்கப்பட்டு, 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது.ஆனால், போதிய இட வசதியின்றி செயல்பட்டு வந்ததால், இரு மார்க்கெட்டுக்கும் புதிய கட்டுமான பணிகளை, மாநகராட்சி நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கியது. செங்கழு நீரோடை வீதியில் இயங்கும் நேரு மார்க்கெட் பணிகள், 4 கோடி ரூபாய் மதிப்பில் தொடர்ந்து நடைபெறுகின்றன.ரயில்வே சாலையில், 2022ம் ஆண்டு இறுதியில், 7 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட மார்க்கெட் பணிகள் மெத்தனமாகவே நடந்தன. இதனால், ஓரிக்கையில் இரண்டு ஆண்டுகளாக ராஜாஜி மார்க்கெட் தற்காலிகமாக செயல்படுவதால், 5 கி.மீ., துாரம் பயணித்து வர மக்கள் தயங்குவதால், வியாபாரம் பாதிப்பதாகவும், மார்க்கெட்டுக்கு வருவோர் விபத்தில் சிக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.இதனால், வியாபாரம் குறைந்து வாழ்வாதாரம் பாதிப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்து வந்தனர்.பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், கடந்த ஆக., 12ல், முதல்வர் ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக ராஜாஜி மார்க்கெட்டை திறந்தார். புதிய மார்க்கெட்டில், 258 கடைகள், கிடங்குகள் கட்டப்பட்டிருப்பதால், அவற்றில் சில நாட்களில் வியாபாரத்தை துவக்கலாம் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர்.ஆனால், மார்க்கெட்டை டெண்டர் விடும் பணிகளே இன்னும் முடியாததால், வரக்கூடிய தீபாவளி பண்டிகைக்கு, புதிய மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக வியாபாரிகள் புலம்புகின்றனர்.புதிய மார்க்கெட் டெண்டர் பணிகள் முடிந்து, வாடகை நிர்ணயம், கடை ஒதுக்கீடு போன்ற பணிகள் முடிய பல நாட்களாகும் என, வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.