காஞ்சியில் வரும் 22ல் காவலர் தேர்வுகளுக்கு பயிற்சி
காஞ்சிபுரம்:காவலர், சிறைகாவலர் உள்ளிட்ட தேர்வுகளுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு, வரும் 22ம் தேதி முதல் துவங்க உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது 3,665 காலிப் பணியிடங்களுக்கான இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளன. நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் வரும் 22ம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விபரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.