உத்திரமேரூர்:-திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில், 'வர்தா' புயலினால் சேதமடைந்து உடைந்த கலசத்தை மாற்றி புதிய கலசம் அமைக்க, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனம் கிராமத்தில் பழமை வாய்ந்த வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த கோவில் கோபுரத்தில் ஐந்து கலசங்கள் இருந்தன. அதில், ஒன்று, 2016ல் ஏற்பட்ட, 'வர்தா' புயலின்போது சேதமடைந்து விழுந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சேதமடைந்த கலசத்திற்கு பதிலாக, வேறொரு கலசத்தை பொருத்த, ஏழு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.
Galleryஎனவே, வியாக்ரபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் சேதமடைந்துள்ள கலசத்தை, மாற்றி புதிய கலசத்தை பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுக்குறித்து உத்திரமேரூர் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் ப்ரீத்திகா கூறுகையில், ''திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் உடைந்த கோபுர கலசமும் பொருத்தப்படும்,'' என்றார்.