கால்நடை மருத்துவமனை தாமதமாக திறந்ததால் அவதி
உத்திரமேரூர்: உத்திரமேரூரில் கால்நடை மருத்துவமனை நேற்று மூன்று மணி நேரம் தாமதமாக திறந்ததால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல், விவசாயிகள் அவதியடைந்தனர். உத்திரமேரூரில், காஞ்சிபுரம் செல்லும் சாலையில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் கால்நடை மற்றும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பசு மாடுகளுக்கு சினை ஊசி செலுத்துதல், ஆடு மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. தினமும் காலை 8:00 மணிக்கு கால்நடை மருத்துவமனை திறக்க வேண்டும். நேற்று காலை 11 :00 மணி ஆகியும், மருத்துவமனை திறக்கப்படாமல் இருந்தது. இதனால், கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வந்த விவசாயிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். விவசாயிகள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது : உத்திரமேரூரில் உள்ள கால்நடை மருத்துவமனை சமீப நாட்களாக, குறித்த நேரத்திற்கு திறப்பது இல்லை. இதனால், கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. விஷக்கடியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாததால், அவை உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.