பயணியருக்கு இருக்கை வசதியின்றி வாலாஜாபாத் பேருந்து நிலையம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். வாலாஜாபாத் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தோர், வாலாஜாபாத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைக்காக தினமும் வாலாஜாபாத் வந்து செல்கின்றனர்.தங்கள் பணிகளை முடித்து வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து திரும்ப வீட்டுக்கு செல்கின்றனர்.மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து, பேருந்து பிடித்து செல்கின்றனர்.இப்பேருந்து நிலையத்தில், பயணியர் அமர்வதற்கென இருக்கை வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், நிழற்குடை வளாகத்தில், திண்ணைப் போன்ற இடத்தில் அமர்ந்து வருகின்றனர். அது போதுமான இருப்பிடமாக இல்லை.எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி ஏற்படுத்தி தர, பயணியர் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.