நிழற்குடையை மறைத்து திருமண பேனர் திருப்புலிவனத்தில் பயணியருக்கு இடையூறு
உத்திரமேரூர்,:திருப்புலிவனத்தில் நிழற்குடையை மறைத்து பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக திருமண பேனர் வைக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி, அப்பகுதிவாசிகள் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.தற்போது, இந்த பயணியர் நிழற்குடையில் திருமண விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரால் பேருந்துக்காக வருபவர்கள் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.இதனால், பயணியர் வெயில் மற்றும் மழை நேரங்களில் வெளியே நின்றவாறு பேருந்து பிடித்து செல்கின்றனர்.சமீப நாட்களாக பயணியர் நிழற்குடையில் ரியல் எஸ்டேட், அரசியல், பள்ளி, துணிக்கடை, திருமண நிகழ்ச்சி, காது குத்தல், பிறந்த நாள் நிகழ்ச்சி உள்ளிட்ட விளம்பரங்கள் அடங்கிய பேனர் வைப்பது தொடர்ந்து நடக்கிறது.பேனர் வைப்பது குறித்த நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டு வருகிறது.எனவே, நிழற்குடையில் வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்ற, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.