உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரும்பு சக்கை லாரி மீது கனரக வாகனம் மோதி டிரைவர் பலி

கரும்பு சக்கை லாரி மீது கனரக வாகனம் மோதி டிரைவர் பலி

கரூர்:கரும்பு சக்கை ஏற்றி வந்த லாரி மீது, காற்றாலை இறக்கை பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில், அதன் டிரைவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ராம்நகர் பிரிவு அருகில் உயர்மட்ட பாலத்தில், கரும்பு சக்கை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. அப்போது, காற்றாலை இறக்கைகளை ஏற்றிச்செல்லும் கனரக வாகனத்திற்கு, பாதுகாப்பிற்காக வரும் வாகனம், பின்னால் வந்து கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு கரும்பு சக்கை லாரியை முந்த முயன்ற போது, காற்றாலை இறக்கை பாதுகாப்பு வாகனம் நிலை தடுமாறியது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரியின் அடியில் சிக்கி கொண்டதால், காற்றாலை இறக்கை பாதுகாப்பு வாகன டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வெங்கமேடு போலீசார், கரூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அங்கு, கரும்பு லாரியில் சிக்கிக்கொண்ட காற்றாலை இறக்கை பாதுகாப்பு வாகனம் மற்றும் டிரைவர் உடலை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்டனர். இதனால் நள்ளிரவு நேரத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின், போலீசார் நடத்திய விசாரணையில், துாத்துக்குடியை சேர்ந்த அஜீத்குமார், 23, என்பவர் காற்றாலை இறக்கை பாதுகாப்பு வாகனம் ஓட்டி வந்து இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி