பாதாள சாக்கடை மூடி இணைப்பு பகுதியில் சாலை: மக்கள் கோரிக்கை
கரூர்: கரூரில், பாதாள சாக்கடை மூடி இணைப்பு பகுதியில், தார் சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த, 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சி, கடந்தாண்டு அக்டோபர் முதல் மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. அதில், பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்கள், பாதாள சாக்கடை திட்டத்தின், ராட்சத குழாய்களில் இணைக்கப்பட்டுள்ளது.அந்த குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்படும் பட்சத்தில், அதை சரி செய்யும் விதத்தில், வட்ட வடிவில் மேல் பகுதியில் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களை, பாதாள சாக்கடை குழாயில் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.குழாய்களை இணைக்க, பள்ளம் தோண்டப்படும் இடங்களில், உடனடியாக தார் சாலை அமைக்கப்படுவது இல்லை. இதனால், கரூர் மாநகர பகுதிகளில், பல தெருக்களின் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதில், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து, விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், பாதாள சாக்கடை மூடி பகுதியில் தார் சாலை அமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.