உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வண்டிப்பாதையில் ஆக்கிரமிப்பு வருவாய்த்துறையினர் அளவீடு

வண்டிப்பாதையில் ஆக்கிரமிப்பு வருவாய்த்துறையினர் அளவீடு

குளித்தலை:குளித்தலை அடுத்த கள்ளை பஞ்., எல்லைக்கோவில்பட்டியில், 35 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் சென்று வர, கள்ளை தென் பகுதியில் இருந்து, எல்லைக்கோவில்பட்டி வரை தார்ச்சாலையும், எல்லைக்கோவில்பட்டியில் இருந்து ஆணைக்கவுண்டம்பட்டி வழியாக பட்டா நிலத்தில் வண்டிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், இதில் வண்டிப்பாதை, பட்டா நிலத்தில் இருப்பதாக கூறி, ஆணைக்கவுண்டம்பட்டியை சேர்ந்த தனிநபர் ஒருவர், இந்த பாதையை அடைத்தார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், வண்டிப்பாதையை மீட்டு சாலை அமைத்து தர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நில அளவையர்கள் அளவீடு செய்து, 12 அடி அகலத்தில் பட்டா நிலத்தில் பொதுப்பாதை உள்ளது எனக்கூறி, அத்துக்கல் நட்டனர். இந்நிலையில், எல்லைக்கோவில்பட்டியில் இருந்து ஆணைக்கவுண்டம்பட்டி வழியாக பொதுமக்கள் பயன்படுத்திவரும் வண்டிப்பாதையில் ஆக்கிரமிப்பு உள்ளதா என, குளித்தலை மண்டல துணை தாசில்தார் நீதிராஜன், நங்கவரம் இன்ஸ்பெக்டர்(பொ) லதா, எஸ்.ஐ., மதியழகன், குளித்தலை குறுவட்ட நில அளவையர் பார்த்திபன், புத்துார் வி.ஏ.ஓ., ஆரோக்கியசாமி, ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அளவீடு செய்வதற்கு வந்தனர். அப்போது, தனிநபர் தரப்பை சேர்ந்த சிலர், 'உரிய அனுமதி இல்லாமல் எப்படி எங்கள் நிலத்தில் அளவீடு செய்யலாம்' என, எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு, 'உயர் அதிகாரிகளின் ஆணைப்படி தான் அளவீடு செய்கிறோம்' என, அதிகாரிகள் தெரிவித்ததால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின், அதிகாரிகள் வண்டிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை