ராமனுார், பசுபதிபாளையம் பிரிவு சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் தவிப்பு
கரூர் ஆக. 30-- கரூர் ராமனுார், பசுபதிபாளையம் பிரிவு சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.கரூர் அருகே பசுபதிபாளையம், ராமானுார் பிரதான சாலையில், ஏராளமான வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். தொழிற்பேட்டை, சணப்பிரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, வாகனங்களில், ராமானுார் பிரதான சாலை வழியாக, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.ராமானுார் பிரதான சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. சில இடங்களில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு முற்றிலும் பயனற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக, ராமனுாரில் இருந்து பசுபதிபாளையம் பிரிவு சாலையில் பள்ளம் உள்ளது. அதனை, பழைய சிமென்ட் குழாய் வைத்து மறைந்து வைத்துள்ளனர். இரவு நேரங்களில் டூவிலர்களில் வருபவர்கள், நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். போதிய விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.எனவே, பசுபதிபாளையம் - ராமானுார் பிரதான சாலையை, சீரமைப்பதோடு, பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.