பட்டா நிலத்தில் புதைத்த சடலத்தை தோண்டி எடுத்து சுடுகாட்டில் புதைப்பு
பவானி, பவானி அருகே சாணார்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம், 58; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இறந்தவரின் உறவினர்களான, கிரி மற்றும் சுப்பிரமணி ஆகியோருக்கும் சேர்ந்து, மொத்தமாக ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தை இதுவரை பாகப்பிரிவினை செய்யவில்லை. கடந்த மாதம், 26ல் சுப்பிரமணியன் மற்றும் கிரி ஆகியோரின் தந்தை சின்னத்தம்பி, 80, இறந்தார். அவரது உடலை பாகப்பிரிவினை செய்யப்படாத நிலத்தில், சதாசிவம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் புதைத்தனர். இதுகுறித்து பவானி போலீசாரிடம் சதாசிவம் புகாரளித்தார். இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கோபி ஆர்.டி.ஓ.,வுக்கு பரிந்துரைத்தனர். அவரது விசாரணையில், சடலத்தை தோண்டி எடுத்து, சுடுகாட்டில் புதைக்குமாறு உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து சடலத்தை, சுப்பிரமணி மற்றும் கிரி, பவானி போலீசார், வருவாய்த்துறையினர் பாதுகாப்புடன், நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கப்பட்டு, மைலம்பாடி பஞ்., சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.