விவசாய திட்டங்களை எளிதில் பெற தனி குறியீட்டு எண்கள் அறிவிப்பு
கரூர்: மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் பயன்பெற, விவசாயிகளுக்கு வேளாண் அடுக்ககம் திட்டம் மூலம், தனி குறியீட்டு எண்கள் வழங்கப்படும் என, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை, மகளிர் திட்டம் ஆகிய அலுவலர்களை கொண்டு தரவுகள் சேகரிக்கும் பணி நடக்கிறது. நிலம், விவசாயிகளின் விபரம், நில உடமை வாரியாக புவிசார்பு குறியீடு செய்த பதிவு விபரம், நில உடமை வாரியாக மின்னணு பயிர் சாகுபடி விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் -தனி குறியீட்டு எண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒற்றை சாளர முறையில் பயன்மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு என, தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின், அவர்களது தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். இனிவரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் தரவுத் தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றை சாளர முறையில் பயன் பெறலாம்.நேரடி பண பரிமாற்றம்அரசு திட்டங்களில் விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு முறையும் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடி பண பரிமாற்றம் செய்யப்படும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், எளிய முறையில் பயிர்க்கடன் பெற இயலும். இதற்காக கிராமங்கள் தோறும் முகாம் நடக்க உள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பட்டா, ஆதார் அட்டை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.