ஜூடோவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் வழங்கல்
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று முன்தினம் பொதுமக்கள் குறைதீர்கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன்கள், பட்டா மாறுதல், வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி. சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட, 365 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2024-25ம் ஆண்டுக்கு மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான பாரதியார் தின மற்றும் குடியரசு தின ஜூடோ விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், கேலோ இந்தியா ஜூடோ பயிற்சி மைய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரகாசம், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், கரூர் ஆர்.டி.ஓ.,முகமதுபைசல், கலெக்டர் நேர்முக உதவியாளர் (நிலம்) பச்சமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.