பிரம்மோஸ் ஏவுகணையால் திட்டம் கெட்டது: பாக்., பிரதமர்
லாச்சின் ''எங்கள் விமான தளங்களை அழித்து, தாக்குதல் நடத்த முடியாத நிலைக்கு, இந்திய ராணுவம் எங்களை தள்ளிவிட்டது,'' என பொது நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் துருக்கி அசர்பைஜான் முத்தரப்பு உச்சி மாநாடு அசர்பைஜானின் லாச்சின் நகரில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது: கடந்த மே 10ம் தேதி அதிகாலை தொழுகைக்கு பின், 4:30 மணிக்கு எங்கள் விமானப் படைகள் இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி தர தயாராக இருந்தன.ஆனால் அதற்கு முன்பே, நுார் கான் விமான தளம், முரித் விமான தளம் உள்ளிட்டவற்றை இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தி தாக்கியது. இதில் விமான தளங்கள் சேதமடைந்தன. இதனால், எங்கள் திட்டம் பாழானது. இவ்வாறு அவர் பேசினார்.