பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை அரவக்குறிச்சி வணிகர்கள் மகிழ்ச்சி
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியை கடந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பழனிக்கு பாதயாத்திரை செல்வதால் உணவகங்கள், டீக்கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளதால், வணிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அரவக்குறிச்சி வழியாக பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரையாக அரவக்குறிச்சி வழியாக பழனிக்கு சென்றனர். அதிகாலை, இரவு நேரம், வெயில், பனி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அரவக்குறிச்சி பொதுமக்கள் ஆங்காங்கே குடிநீர் பாட்டில், குளிர்பானம், உணவு பொட்டலங்கள் வழங்கி வருகின்றனர். பாதயாத்திரை பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரவக்குறிச்சியை கடந்து செல்வதால், அரவக்குறிச்சியில் உள்ள உணவகங்கள், டீக்கடைகளில் நல்ல விற்பனையாவதாக வணிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.