மனைவிக்கு அளித்த சிகிச்சையில் சந்தேகம்;கலெக்டரிடம் கணவர் மனு
கரூர், எனது மனைவி பிரசவத்தில் இறந்த நிலையில், சிகிச்சையில் சந்தேகம் இருப்பதால் விசாரணை நடத்த வேண்டும் என, கரூர் கலெக்டரிடம் அவரது கணவர் சுரேஷ் மனு அளித்துள்ளார்.கரூர் மாவட்டம், கடவூர் அருகே முத்தாக்கவுண்டன்பட்டியில் வசித்து வருகிறேன். கூலி தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். கடந்த வாரம் எனது மனைவி யோகப்பிரியா, 24, கருவுற்று இருந்தார். கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், முறையாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த, 1ல் பிரசவத்திற்கு கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன்பின் யோகப்பிரியாவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த, 10ல் இறந்தார். எனது மனைவிக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, சிகிச்சை அளித்த டாக்டர் குழுவிடம் விசாரணை நடத்த வேண்டும். தவறு இருப்பின் தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.