கரூரில் இரவு நேரத்தில் குடிநீர் வினியோகத்தால் மக்கள் தவிப்பு
கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் இரவில் குடிநீர் வினியோகம் செய்வதால் மக்கள் தவித்து வருகின்றனர்.கரூர் மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் காவிரி ஆறு பயணிக்கும் நெரூர், வாங்கல் மற்றும் கட்டளை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் பகல் நேரங்களிலும், சில பகுதிகளில் நள்ளிரவிலும் சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. கரூர் தொழில் நகரம் என்பதால் பெரும்பாலானோர் வேலைக்கு சென்று விடுகின்றனர். இவர் கள், வீடு திரும்பி துாங்கி கொண்டிருக்கும் போது, இரவில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில பகுதி குடியிருப்புகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டி வசதி இல்லை. இதனால், வினியோகம் செய்யப்படும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தும் முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கரூர் தான்தோன்றிமலை, காந்திகிராமம் ஆகிய பகுதியில் நள்ளிரவு நேரங்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால் மக்கள் அதிகளவு சிரமப்பட்டு வருகின்றனர். மக்கள் பயன்படுத்தும் வகையில் சரியான நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.