உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா கோலாகலம்

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா கோலாகலம்

கரூர், கரூர், மாரியம்மன் கோவிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா கோலாகலமாக நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக சென்று சுவாமியை வழிபட்டனர்.தமிழக அளவில், கரூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் துவங்கியது. 16ல் பூச்சொரிதல் விழா, 18ல் காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் காலையில் பல்லக்கிலும், மாலையில் ரிஷபம், புலி, பூத வாகனம், சிம்மம், அன்னம், சேஷ, யானை, குதிரை, காமதேனு, கஜலட்சுமி வாகனம் என்று சுவாமி திருவீதி உலா நடந்தது.கடந்த மூன்று நாட்களாக காலை, 7:00 மணி முதல் இரவு வரை தேரோட்டம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வருதல், மாவிளக்கு ஊர்வலம் என பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா நேற்று மாலை, 5:15 மணிக்கு நடந்தது. கோவிலில் இருந்து பூசாரி கம்பத்தை எடுத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கம்பத்தை நிறுத்தினார். அதில், கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, கரூர் எம்.பி., ஜோதிமணி, கரூர் மேயர் கவிதா ஆகியோர் சென்றனர். பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள மணல் திட்டில், கம்பம் நடப்பட்டு அதன் மீது மஞ்சள், குங்குமம் துாவி பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் உள்ள புனித நீரில், கம்பத்தை விட்டு மூழ்கடித்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழாவையொட்டி, அமராவதி ஆற்றில் இரவு வாண வேடிக்கை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாண வேடிக்கையை கண்டு களித்தனர். கம்பம் விடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, 100க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று புஷ்ப வாகனம், நாளை கருட வாகனம், 31ல் மயில் வாகனம், 1ல் கிளி வாகனம், 2ல் வேப்பமர வாகனம், 3ல் பின்னமர வாகனத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். 4ல் புஷ்ப அலங்காரம், 5ல் பஞ்ச பிரகாரம், 6ல் புஷ்ப பல்லக்கு, 7 ல் ஊஞ்சல், 8 ல் அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மண்டல தலைவர் ராஜா, கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்டீபன்பாபு, சரவணன், கரூர் பழனிமுருகன் ஜூவல்லரி உரிமையாளர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை