கரூர் மேயர் கணவர் பதவி பறிப்பு வடக்கு செயலராக கவுன்சிலர் நியமனம்
கரூர், கரூர் மாநகராட்சி மேயர் கவிதாவின் கணவர் கணேசனின் பதவி பறிக்கப்பட்டு, அவருக்கு மாற்றாக மாநகராட்சி கவுன்சிலர் பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாநகராட்சி மேயராக கவிதா இருந்து வருகிறார். இவரது கணவர் கணேசன், கரூர் மாநகராட்சி வடக்கு பகுதி செயலராக பதவி வகித்து வந்தார். அவர், கட்சி பணிகளில் சரியாக செயல்படுவதில்லை என்று புகார் இருந்து வந்தது. இந்நிலையில், அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கரூர் மாநகராட்சி, 5வது வார்டு கவுன்சிலர் பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தி.மு.க., மாநில பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாநகர வடக்கு பகுதி செயலர் கணேசன், அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக, பாண்டியன் கரூர் மாநகர பகுதி வடக்கு பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.