அணைகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து சரிவு
கரூர், மேட்டூர், பவானிசாகர், அமராவதி அணைகளில் நீர்திறப்பு குறைந்து வருவதால், மாயனுார் கதவணையில் தண்ணீர் வரத்து சரிய தொடங்கி உள்ளது.மேட்டூர் அணையில் ஜூன், 12 முதல் காவிரி டெல்டாவில் குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர் வரத்து உயர்ந்துள்ளது.அங்கிருந்து, உபரிநீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், 1.41 லட்சம் கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று பகல், 2:00 மணி நிலவரப்படி, 1 லட்சத்து, 23 ஆயிரத்து, 605 கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில், 1 லட்சத்து, 22ஆயிரத்து, 135 கன அடியும், பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையில் இருந்து, 1.10 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், அமராவதி, பவானிசாகர் அணைகளில் நீர் திறக்கப்படும் தண்ணீர் காவிரி ஆற்றில் கலக்கும். இதனால், மாயனுார் கதவணையில் கூடுதலாக நீர் வரத்து இருந்து வந்தது. இந்த அணைகளில் நீர் திறப்பு குறைந்து இருப்பதால், மாயனுார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கி விட்டது.