இளம் பெண் சாவில் மர்மம் உறவினர்கள் சாலை மறியல்
கரூர், கரூர் அருகே, இளம் பெண் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, நேற்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டம், காதப்பாறை வெண்ணைமலை பகுதியை சேர்ந்தவர் முருகராஜ், 30, கூலி தொழிலாளி. இவருக்கும் காவியா, 26, என்ற பெண்ணுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் குடும்ப பிரச்னை காரணமாக, காவியா அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை, வெங்கமேடு போலீசார் கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நேற்று மதியம், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள், காவியாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, காந்திகிராமத்தில் உள்ள திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த, கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்ட போலீசார் புகார் கொடுக்கும் பட்சத்தில், விசாரித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர்.இதையடுத்து, தற்கொலை செய்து கொண்ட காவியாவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், கரூர் - திருச்சி சாலையில் உள்ள காந்தி கிராமம் பகுதியில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.