அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
கரூர், டிச. 19-காணியாளம்பட்டியில் உள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வழித்தடத்தில், கூடுதலாக பஸ்களை இயக்க மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், கடவூர் அருகில் காணியாளம்பட்டியில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கரூர், குளித்தலை, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, காணியாளம்பட்டி வழியாக இயக்கப்படும் பஸ்கள், மாணவ, மாணவியருக்கு போதுமானதாக இல்லை. அந்த வழியாக இயக்கப்படும் பஸ்களில், எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மாணவ, மாணவியர் பஸ்களில் ஏறி பயணம் செய்ய முடியவில்லை. மீறி ஏறினாலும், படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பஸ் பாஸ் இருந்தும் மாணவ, மாணவியர் கூடுதல் பஸ் வசதி இல்லாததால் தவித்து வருகின்றனர். இதனால், காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் அமைந்துள்ள வழித்தடத்தில், பீக் அவரஸ் நேரங்களிலாவது கூடுதல் பஸ்களை இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.