செட்டிபாளையம் தடுப்பணை பிரிவில் ரவுண்டானா தேவை
கரூர்:கரூர் அருகே, செட்டிபாளையம் தடுப்பணை பிரிவில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, செட்டிபாளையம் தடுப்பணைக்கு செல்லும் பிரிவு உள்ளது. கரூர் நகர பகுதியில் இருந்து, கருப்பம்பாளையம் சுக்காலியூர், செட்டிபாளையம், அப்பிபாளையம் உள்ளிட்ட, பல்வேறு கிராமங்களுக்கு, மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும்.அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள், கடந்து செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவதுதேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது, செட்டி பாளையம் தடுப்பணை பிரிவில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது, வாகனங்கள் அதிகரித்து விட்டதால், கருப்பம்பாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் இருந்து செல்லும் பொதுமக்கள், மதுரை தேசிய நெடுஞ்சாலையை எளிதாக, கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், விபத்துகளை தடுக்க செட்டிபாளையம் தடுப்பணை பிரிவில், ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.