கரூர் தீயணைப்பு நிலையத்தில் தயார் நிலையில் பாதுகாப்பு உபகரணங்கள்
கரூர், அக். 16-வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், கரூர் தீயணைப்பு நிலையத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, நேற்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் கடந்த, ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டம் வழியாக காவிரியாறு, அமராவதி ஆறு, நங்காஞ்சி ஆறு மற்றும் நொய்யல் ஆறு செல்கிறது.இதனால், வடகிழக்கு பருவமழையின் போது, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் வகையில், கரூர் தீயணைப்பு நிலையத்தில் மீட்பு பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி கிகிச்சை பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று, கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல் பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டார். மழையால், கரூர் மாவட்ட பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என, தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.